இன, மத விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் நாடாக இலங்கை இருக்க வேண்டுமானால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன எம்.பி (18) தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் எமது நாட்டுத்
தலைவர்களின் தவறான முடிவுகளினால் நாட்டின் பிரஜைகள் பல இக்கட்டான நிலைமைகளை எதிர்கொண்டனர் என்பதை புத்தாண்டில் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
எந்த அரசியல் கட்சியும் குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியாது. ஜே.வி.பி கூட கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், அவர்களும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சிறிதளவும் கவனம் செலுத்தவில்லை,
கடனை திருப்பிச் செலுத்தும் சுமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுமக்க வேண்டியுள்ளது.
2001––2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 2004 ஏப்ரல் 10 ஆம் திகதி கவிழ்க்கப்பட்டதற்கு ஜே.வி.பி யும் காரணம். நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒன்றுபட வேண்டும். வெறுப்பை உமிழ்வோர் மற்றும் பொய்களைப் பரப்புபவர்கள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு ஏற்ப மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள். நாட்டை எவரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லாதபோது, ரணில் விக்கிரமசிங்க நாட்டின் நலனுக்காக தோள்கொடுக்க முன் வந்தார்.
ஆனால் அவர் அனைவரது ஒத்துழைப்பையம் கோரியிருந்தார். இன்றும் சிலர் அவருக்கு ஒத்துழைப்பு வழங்காது தேசிய ரீதியில் மக்களை தவறாக வழி நடத்தி அந்நிய சக்திகளின் தேவைகளை நிறைவேற்றி வருவதாக எமக்கு தெரிகிறது.
பழங்கால மன்னர்களின் துரோகம் உட்பட, இலங்கை தனது சொந்த நாட்டு மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது என்பதற்கான சான்றுகளை வரலாறு கொண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது எளிதான காரியம் அல்ல.
ஜனாதிபதியின் தற்போதைய வேலைத்திட்டம் சீர்குலைந்தால், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக இலங்கையர் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த புத்தாண்டில் அரசியல் கட்சிகள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை ரூபாய் நிதி வர்த்தக சந்தைகளில் வலுவான நாணயங்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக முந்தைய வாரங்களில் ரூபாவின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துள்ளது. ஜூன் 2023க்குப் பிறகு முதல் முறையாக ரூபாய் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.