யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், படகொன்றும் நேற்று முன்தினம் புதன்கிழமை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேற்படி கடற்பரப்பில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இக்கைது இடம்பெற்றது.
மின் ஒளி பாய்ச்சி, அனுமதியற்ற வலைகளை பயன்படுத்தி இச்சந்தேகநபர் கடற்றொழிலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
கட்டைக்காட்டை சேர்ந்த இச்சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் யாழ்ப்பாண கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (பு.கஜிந்தன்)