– தொடர்பாளர்கள் தொடர்பில் சுகாதார நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தை தகனம் செய்யும்மாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த 62 வயதான மூதாட்டி ஒருவர் இலங்கைக்கு வந்த நிலையில் உடல்நல குறைபாடு ஏற்பட்டமையால், ஆயுள்வேத சிகிச்சை முறையில் அதனை குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை திரும்பி அராலி பகுதியில் தங்கி இருந்து ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டமையால், யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுமுன்தினம் (12) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட உடற்கூற்று சோதனையின் அவருக்கு மேற்கொண்ட PCR சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தின் இறுதிக்கிரியை மேற்கொள்வேண்டும் என உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது தொடர்பாளர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். விசேட நிருபர்