முஹாஸபா என்பது ஒவ்வொருவரும் தினமும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எந்தளவு கட்டுப்பட்டு வாழ்ந்தோம், இன்னும் அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட விடயங்களில் இருந்து எந்தளவு தூரம் விலகி நடந்து கொண்டோம் என்பன குறித்து தன்னைத் தானே வினவிக் கொள்வதாகும்.அல்லாஹு தஆலா தன் அருள் மறையில் ‘ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன் (59:18) என்று கூறுகின்றான்.நபி (ஸல்) அவர்களும் முஹாஸபா செய்யுமாறு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
உமர் (ரழி) அவர்கள் ‘நீங்கள் விசாரிக்கப்படுவதற்கு முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் (முஹாஸபா செய்து) கொள்ளுங்கள்.
உங்களது செயற்பாடுகள் மறுமையில் நிறுக்கப்படுவதற்கு முன்னர் நீங்களாகவே எடை போட்டுப் பாருங்கள்’ என்று கூறியுள்ளார்கள்.
அதனால் இந்த உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹு தஆலா மறுமையில் நம்மை கேள்வி கேட்க இருக்கிறான். அதனால் எங்களை நாங்களே தினமும் சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியமானது.
எனவே, ரமழானின் ஊடான அல்லாஹ்வின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியுள்ளோமா? ரமழான் எம்மில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா? என்பன குறித்து சுய விசாரணை செய்து கொள்வதோடு எஞ்சியுள்ள நாட்களையும் உச்சளவில் பயன்படுத்திக்கொள்வோம்.