ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத் தலைப்பிறையைக் கண்டதும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். அதாவது தனக்கும் தனது பொறுப்பில் உள்ளவர்களின் பெருநாளுடைய தேவைக்கும் மேலதிகமாக கொண்டிருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும் இது.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘ஸகாத்துல் ஃபித்ர் என்பது நோன்பாளியிடமிருந்து நிகழ்ந்த வீணான செயல்கள் மற்றும் தீய வார்த்தைகளுக்கு குற்றப்பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகின்றது.’ என்றுள்ளார்கள். (நபிமொழி)
இதனால், ஸகாத்துல் பித்ரை இஸ்லாமிய விதிமுறைகளுக்கு அமைய நிறைவேற்றுவதன் மூலம் நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான செயல்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுவதோடு ஏழைகளுக்கு உணவாகவும் அது விளங்கும்.
அதனால், இந்த ஸக்காத்துல் பித்ரை நிறைவேற்ற வேண்டிய காலம், நிறைவேற்றப்பட வேண்டிய பொருட்கள், அளவு என்றபடி மிகவும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள். ஷவ்வால் பிறைக் கண்டது முதல் மறுநாள் காலையில் பெருநாள் தொழுகைக்கு புறப்பட முன்னர் இதனை நிறைவேற்றிட வேண்டும். அதுவே சுன்னாவாகும்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) இமாம் அஹ்மத் ரஹ்) போன்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி, பிரதான உணவாக உட்கொள்ளக்கூடிய தானிய வகையில் இருந்தே இதனை வழங்கப்பட வேண்டும். அதனால், ஒவ்வொருவரும் ‘ஒரு ஸாஃ’ அளவு வீதம், அதாவது 2.4 கிலோ கிராம், ஸகாத் பெறத்தகுதியானவர்களை இணங்கண்டு கொடுத்தல் அவசியதாகும்.
எனவே, ஸக்காதுல் ஃபித்ரை உரிய முறையில் நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பை பெற்றுக்கொள்வோம்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ்
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்