இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் பயணிக்கும் அமெரிக்க, பிரிட்டன் போர்க் கப்பல்கள் இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் அத்தியாவசிய பராமரிப்புக்கும் பழுதுபார்த்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.
சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் லார்சன் மற்றும் டுப்ரோ என்ற கப்பல் கட்டும் தளத்தில் யு.எஸ்.என்.எஸ் சல்வொர் என்ற அமெரிக்க யுத்தக் கப்பல் முதன் முறையாகப் பழுதுபார்க்கப்பட்டுள்ளது. உருக்கு பழுதுபார்த்தலுக்கு இக்கப்பல் உட்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கப் போர்க் கப்பல்களை லார்சன் அண்ட் டுப்ரோ கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்ப்பதற்கென ஐந்தாண்டு ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதனால் அமெரிக்க கடற்படைக் கப்பல்களை பழுதுபார்க்கும் மையமாக இக்கப்பல் கட்டும் தளம் விளங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பிரித்தானியாவின் இரண்டு போர்க் கப்பல்களும் இக்கப்பல் கட்டும் தளத்தில் அத்தியாவசியப் பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.