சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விபுலானந்தர் கலை இலக்கிய மன்றம், பேத்தாழை பொதுநூலகத்துடன் இணைந்து சிறப்புக் கவியரங்க நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் நடத்தியிருந்தது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன், கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஹாரூன், சட்டத்தரணி திருமதி சுஜா எல்விஸ், சட்டத்தரணி திருமதி தனுசி கோபிஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக ‘முத்திறக் கவியரங்கம்’ அமைந்திருந்தது. மூன்று அரங்குகளாக நடைபெற்ற இக்கவியரங்கத்தில் புகழ் அரங்கை திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் (அதிபர், எழுத்தாளர்), புன்மை அரங்கை திருமதி பாரதி ஷாஜஹான் (தமிழாசிரியர், கவிஞர்), புரட்சி அரங்கை திருமதி விஜிதா முருகவேள் (அதிபர், கவிஞர்) தலைமை ஏற்று நிகழ்த்தினர்.
அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கவிபாடி இந்நிகழ்வைக் களைகட்ட வைத்தனர். அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக நலன்விரும்பிகள் எனப் பல்வேறு சமூக மட்டத்தினரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு சமூகத்தில் நல்வரவேற்பைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
த.ஷர்மிதன்