Thursday, May 9, 2024
Home » இலங்கைக்கான சுயமான தமிழ் இலக்கியத்தை தோற்றுவிக்க அடித்தளமிட்ட பத்திரிகை தினகரன்

இலங்கைக்கான சுயமான தமிழ் இலக்கியத்தை தோற்றுவிக்க அடித்தளமிட்ட பத்திரிகை தினகரன்

அமரர்கள் கைலாசபதியும், சிவகுருநாதனும் தினகரனின் இரு அடையாளச் சின்னங்கள்!

by damith
March 18, 2024 11:16 am 0 comment

இலங்கைத் தலைநகரில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் உதயமாகிய தினகரன் பத்திரிகைக்கு இந்த ஆண்டு, 92 ஆவது பிறந்த தினம்.

ஒன்பது தசாப்த காலமாக, இலங்கையில் நேர்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையெல்லாம் ஊடகப்பெருவெளியில் தொடர்ந்தும் பதிவுசெய்து வந்திருக்கும் தினகரன், தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தகுந்த நாளேடாகவும் பரிமளிக்கிறது.

காலிமுகத்தில் கடலோடு சங்கமிக்கும் சிற்றேரியின் அருகே தினகரனும் இதர ஆங்கில, சிங்கள ஏடுகளும் வெளியாகும் மாபெரும் கட்டடம் அமைந்திருப்பதனால், தினகரனுக்கும் ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என்ற நாமம் கிட்டியிருக்கிறது.

தினகரன், 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி தினகரன்.

தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக வளர்த்தெடுத்த பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி, வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத்தினசரியின் ஆசிரியரானார். பாரதி இயல் ஆய்வாளராகவும் அறியப்பட்டவர் பேராசிரியர் க. கைலாசபதி. அக்காலப்பகுதியில் இருவேறு கருத்தியல்கள் இலக்கிய உலகில் நிலவியதாக இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கைலாஸ் பத்திரிகைத்துறையுட் புகுந்த காலம் மேலைத்தேய நாகரிகமும் ஆங்கில மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கிய காலம். பொருளாதார அரசியல் துறைகளில் மட்டுமின்றிப் பண்பாட்டுத் துறையிலும் அந்நிய ஆதிக்கம் தளரத் தொடங்கிய காலம்.

சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்கள், இந்நாட்டில் தங்கள் இருப்பு, வரலாறு, வருங்காலம், தனித்துவம் முதலானவை குறித்து உத்வேகத்துடன் உணர சிந்திக்கத் தலைப்பட்ட காலம்.

“தமிழ்மொழி உபயோகச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை, சுதேச மொழி முக்கியத்துவம் பெறத் தொடங்கியமை, புதிதாக உருவான கலாசார அமைச்சு தமிழ்க்கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தமை, அதுவரை ஆங்கிலப் பத்திரிகைகளே பெற்றிருந்த அரசியல் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் பொதுமக்களைப் பரவலாகச் சென்றடைந்த சிங்கள, தமிழ்ப் பத்திரிகைகளும் பெறத்தக்க வாய்ப்புத் தோன்றியமை, வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடு காரணமாக இந்திய எழுத்தாளர்களுக்குப் பணம் அனுப்பும் வசதி கட்டுப்படுத்தப்பட்டமை போன்றவை யாவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை” என்று விரிவாக கைலாசபதியின் தினகரன் பிரவேசம் பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன் தனது பன்முக ஆய்வில் ‘கைலாசபதி’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

தினகரனின் தொடக்க காலப்பகுதியில் சிறுகதைகள், தொடர்கதைகள் படைத்தவர்கள் சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பகைப்புலமாகக் கொண்டு எழுதினார்கள். இதனால் அன்றைய ஈழத்து தமிழ்த்தேசிய படைப்பிலக்கியம் தேக்கம் கண்டது. அதனை மாற்றியவர்தான் கைலாசபதி.

அவர் இலங்கை எழுத்தாளர்களுக்கு தினகரனில் களம் தந்து ஊக்கமளித்தார். பத்திரிகையின் செல்நெறியை வகுத்தார்.

கைலாசபதிக்குப் பின்னர் தினகரன் ஆசிரியராக பொறுப்பேற்ற இ.சிவகுருநாதன், யாழ்.பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டம் பெறுவதற்காக சமர்பித்த ஆய்வில், ‘தேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ச்சிகாண கைலாசபதி களம் அமைத்துக் கொடுத்தார்’ என்று குறிப்பிட்டிருப்பதையும் பேராசிரியர் தில்லைநாதன் ஊடாக நாம் அறிகின்றோம்.

கைலாசபதி, தான் மாத்திரம் வளராமல், தன்னைச்சூழ இருந்தவர்களையும் வளர்த்தெடுத்தார். அவர்கள் பத்திரிகையாளர்களாயினும் படைப்பாளிகளாயினும் கலைஞர்கள், ஓவியர்கள், கார்டுனிஸ்ட்டுகளாயினும் சிற்றிதழ்காரர்களாயினும் அவர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் ஆரோக்கியமாக வளர்வதற்கு உற்றதுணையாக விளங்கியவர் கைலாசபதி.

மகாகவி பாரதியாரும் பத்திரிகையாளர்தான். பாரதியாரைச் சுற்றியும் எப்பொழுதும் நண்பர்கள் இருப்பர் என அவரது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்கின்றோம். அவர்கள் இருக்குமிடத்தில் வாதங்களும் இடம்பெறும். யார் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது பற்றிய கலந்துரையாடல்கள் நிகழும். மொழிபெயர்ப்புகள் தொடர்பாக பேசப்படும்.

தமிழ் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய பாரதி சிந்தித்த கிருத யுகம் தொடர்பாக எழுதியிருக்கும் மு. தளையசிங்கத்திற்கு, கைலாசபதியின் மார்க்ஸீய சிந்தனைகளில் அபிப்பிராய பேதங்கள் இருந்தன. கைலாசபதியை விமர்சித்தவர்களில் மு.தளையசிங்கம் முக்கியமானவர். இவர் கண்டியிலிருந்து வெளியான ‘செய்தி’ எனும் பத்திரிகையில் எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற தொடரில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்:

“தினகரன் ஆசிரியரான கைலாசபதி, இலக்கியத்தைப் பற்றிய ஓரளவுக்குத் தரமான பொதுவுடமைக் கருத்துக்களை மட்டும் புகுத்தவில்லை. கூடவே அதே வண்டியில் கா. சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரத்னா போன்ற இலக்கியம் பற்றிய தரமான கருத்துக்களையுடைய வேறு பலரின் செல்வாக்கையும் பக்கபலத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தார்.” இவ்வாறு தளையசிங்கம் பதிவு செய்துள்ளார். கைலாசபதியை தமது எழுத்துக்களில் விமர்சித்துவந்த மு.தளையசிங்கமும் கூட தினகரனை இலக்கியத்தரமாக வெளியிடுவதற்கு அவர் மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சிகளை விதந்து பாராட்டியிருக்கிறார். இவர்கள் இருவரதும் சிந்தனைகளை பாரதியின் வெளிச்சத்திலிருந்தே இலக்கிய உலகம் அவதானித்திருக்கிறது.

கைலாசுக்குப் பின்னர், தினகரன் ஆசிரியப்பொறுப்பை ஏற்ற இ.சிவகுருநாதன் மாத்திரமே இங்கு நீண்ட காலம் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளராவார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக 1981 இல் தெரிவான சிவகுருநாதன், அதன் பின்னர் 1983 – 84 காலப்பகுதியிலும் அந்தப் பதவியை வகித்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் அங்கு வெளியான ‘இளங்கதிர்’ என்னும் இதழின் ஆசிரியராகவும் இயங்கியிருக்கும் இவர், அங்கு ‘இந்து தர்மம்’ என்னும் மற்றும் ஒரு இதழ் வெளிவருவதற்கும் முக்கிய பங்காற்றியவர்.

ஈழத்து இலக்கிய உலகையும் இங்குள்ள படைப்பாளிகளையும் நன்கு தெரிந்து வைத்திருந்த சிவகுருநாதன், தினகரனில் பல சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்பான ஆசிரியத் தலையங்கங்களும் எழுதியுள்ளார்.

தினகரன் வாரமஞ்சரியும் காலத்துக்குக் காலம் பாரதி ஆய்வுகளை வெளியிட்டும் மறுபிரசுரம் செய்தும் வந்திருக்கிறது. ருஷ்ய எழுத்தாளர் ஏ. ஷெலிஷேவ், கைலாசபதி, செ. கணேசலிங்கன், இளங்கீரன், சி. மௌனகுரு, சொக்கன், க. நவசோதி, மு. கனகராசன், மு. சடாட்சரன், வேல் அமுதன், அராலி வெ.சு. நடராசா, அன்புமணி, க. கந்தசாமி, அந்தனிஜீவா, பொன்னி ஆனந்தன்,சகுந்தலா நல்லையா, ஏ. இக்பால், தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் பாரதி பற்றிய ஆக்கங்களும் தேவகாந்தன், ஷெய்கு இஸ்ஸதீன், மு. துரைசாமி, பாண்டியூரான், வளவை வளவன், சி. ஆறுமுகம், முதலான பலரின் கவிதைகளும் பாரதி நூற்றாண்டு காலத்தில் தினகரன் வாரமஞ்சரியை அலங்கரித்திருக்கின்றன. தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் காலம் அறிந்து அதற்குப் பொருத்தமாகவும் பல விடயங்களைச் செய்திருக்கிறார். பாரதி நூற்றாண்டு காலத்தில்தான் பேராசிரியர் கைலாசபதி கொழும்பு அரசினர் மருத்துவமனையில் 1982 டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி காலமானார். தினகரன் நாளேடு கடந்து சென்றிருக்கும், ஒன்பது தசாப்த காலத்தில் அரசியல், சமூகம், பொருளாதார, ஆன்மீகம், தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது போன்று , கலை, இலக்கிய செய்திகளுக்கும் பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது. தினகரன் வாரமஞ்சரி சிறுகதைகள், தொடர் கதைகள், மற்றும் இலக்கிய புதினங்களுக்கு போதியளவு களம் வழங்கியிருக்கிறது. தற்போது கனடாவில் ‘தமிழர் தகவல்’ மாத இதழை வெளியிட்டுவரும் எஸ். திருச்செல்வம் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் தினகரன் வாரமஞ்சரியில் ‘அறுவடை’ என்ற இலக்கியப்பத்தியை எழுதி வந்தார்.

தற்போது இங்கிலாந்தில் ‘புதினம்’ என்ற இதழை நடத்திவரும் ஈ. கே. ராஜகோபாலும், தினகரனில் பணியாற்றிய காலப்பகுதியில் கலை, இலக்கியப்பத்திகளை எழுதினார்.

இவ்வாறு தினகரன் பாசறையில் வளர்ந்தவர்களும் புலம்பெயர்ந்து சென்ற பின்னரும் இலக்கியப்பணியும் ஊடகப்பணியும் தொடருகின்றார்கள்.

சமகாலத்தில் இலங்கையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் ஊடகக்கற்கை நெறியில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். பல மின்னிதழ்கள் தோன்றியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக விளங்கியிருக்கும் தினகரனின் 92 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவோம். அதன் வெற்றிப்பயணம் நூற்றாண்டுகள் கடந்து தொடர வாழ்த்துவோம்!

முருகபூபதி (அவுஸ்திரேலியா)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT