நாட்டின் பொருளாதாரம் பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அதிகாரத்தைப் பெறுவதற்காக வழங்கிய அரசியல் வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அந்தத் தவறை செய்ய, தாம் தயாரில்லையென வலியுறுத்திய ஜனாதிபதி, உண்மைக்கு முகம் கொடுத்து நாட்டுக்கு சாதகமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு (12) தப்ரபேன் எண்டர்டைன்மண்டில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் விரைவாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான இளைஞர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதியிடம் நேரடியாக கேள்விகளைத் தொடுத்தனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி, இளைஞர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையைக் குறிக்கும் வகையில், “யுனைடட் யூத் அமைப்பின் ஆலோசகர் நியோமல் பெரேரா ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.