2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் தன்னை ஆட்சியில் இருந்து நீக்கும் நோக்கத்துடன் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் “The Conspiracy to Oust Me from the Presidency” (ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றியதன் சதி) என்ற தலைப்பில், தனது ஆட்சி மாற்ற நடவடிக்கையானது சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட செயற்பாடு என தெரிவிக்கும் தனது அனுபவத்தை நாளை (07) புத்தகமாக வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது வெளிநாட்டுத் தலையீடும், அரசியலின் சூழ்ச்சியும் அதிகரித்துள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட போராட்டம் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.