‘அன்பே சிவமாய் அமர்வாளாம் நம் ஆதிபராசக்தி
ஆறுதல் சொல்லிஅமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி
இப்புவி இன்பம் வேண்டாம் என்றால் ஆதிபராசக்தி
ஈடில்லாகாட்சிஅளிப்பாள் ஆதிபராசக்தி
உயர்வுதாழ்வுஒன்றும் பாரால் ஆதிபராசக்தி
ஏங்கும் நிறைந்தசோதியாய் நிற்பாள் ஆதிபராசக்தி
ஏகாட்சமாய் அவனிதனிலேவந்தாய் ஆதிபராசக்தி’
என்ற வரிகளுக்கிணங்க மனிதவாழ்வை முழுமையாக்குவது தெய்வபக்தியே. உலகின் பிறவிகளில் எல்லாம் தலைசிறந்த பிறவியாய் கருதப்படுவது மானிடப்பிறவியே. இந்தப் பாக்கியத்தை பெற்றதன் நோக்கமே வாழ்வுதந்த இறைவனை எப்பொழுதும் நினைந்து வணங்கி கொண்டிருப்பது.
இறைசிந்தனையுடைய ஒவ்வொரு நாளுமே பிறவாத நாளாக கருதப்படல் வேண்டும். அந்த வகையில் தெய்வசக்தி கொண்டாடுவது அறங்களிலே முதன்மையானதாக விளங்குவதாகும்.
தமிழர்களுக்கு 12 மாதங்களுமே மிகவும் சிறப்பான தெய்வபக்தி அளிக்கும் நாளாக விளங்கும். ஆகவே மாசிமாதத்தில் வரும் மாசிமகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசிபௌர்ணமியோடு கூடி வரும் மகநட்சத்திரத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்புநாளாக மாசிமகம் விளங்குகிறது. மாசிமகம் என்றாலேஅனைவரதும் நினைவுக்கு வருவது மாத்தளை மாநகரிலே மாரியம்மனின் மாசிமக பஞ்சரதபவனி ஊர்கோலம் ஆகும். இருபத்தைந்து நாட்கள் மாத்தளை மாநகரமே விழாக்கோலமாக ஜொலிக்கும்.
“பஞ்சரதம் அசைந்துவர, பாவையர்கள் வடம் பிடிக்க, மஞ்சுதவில் மாத்தளையில் மாசிமகம் சிறந்திடுதே” என்ற பாடலில் பாடலாசிரியர் மிகவும் அழகாக ரதஅழகினை கூறுகிறார்.
1934 ஆம் ஆண்டளவில் கட்டுத்தேர் கட்டிஅலங்கரித்து விநாயகர், முருகன், சிவனம்பால் என முத்தேர் பவனி வருடாந்தம் நடந்தேறியது. ஒருதேரை ஆறு வடிவங்களாக கொண்டுஅமைத்து அதில் கலை, தத்துவம், வர்ணம், புவனம், பதம், மந்திரம் என ஆறு வகையாக திருத்தேரை வடிவமைத்து ஒரு சரீரமாக கருதி அதன் நடுவில் அம்பிகையை வைத்து வழிபட வேண்டும் என்பதுஆகமவிதியாகும்.
அதற்கமைய யாழைப் பிறப்பிடமாக கெண்ட தம்பித்துரை தம்பதியினர் கைவண்ணத்தில் எழில்மிகு சித்திரத்தேரை அமைத்து இலங்கை வரலாற்றில் பஞ்சரதபவனியை வரச்செய்து சரித்திரம் படைத்த பெருமை அருள்மிகுமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்ேக உரியது.
பல சிறப்புகளும் சிறப்பாக அமையப்பெற்ற அன்னையின் ஆலயம் அருவிகொட்டும் அழகுமலைக்குன்றுகளுக்கு கிழக்கே இலங்கை திருநாட்டைஅழகுபடுத்தும் மகாவலிகங்கையின் தீர்த்தகரைக்கு மேற்கே ஸ்ரீஏழுமுகக்காளியம்மன் தேவஸ்தானத்திற்கு வடகிழக்குதிசையிலும் வெள்ளக்கள் ஸ்ரீஅழகர் பெருமாள் கோவிலுக்குதெற்கேயும் கோம்பிலிவல ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு வடக்கேயும் மாத்தளைநகரில் அமையப் பெற்று முத்துவிநாயகர் ஆலயமும் ஸ்ரீகதிர் வேலாயுதசுவாமி ஆலயமும் பிள்ளையார் கோவில் ஆலயங்கள் நாற்புறமும் புடைசூழ அதன் நடுவே அன்னைமுத்துமாரி அருளாட்சி செய்கிறாள்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது சித்திரத்தேர் எரிக்கப்பட்டது. பின் மீண்டும் 1992ம் ஆண்டு ஐந்து தேர்களையும் மீண்டும் உருவாக்க அம்பாள் சக்திகொடுத்து அருள்பாலித்தால் இதிலிருந்து அம்பாளின் மகிமை உலகிற்கோர் எடுத்துக்காட்டு. அன்னைமாரியை வேண்டி நிற்போருக்கு அனைத்தையும் அள்ளிக்கொடுப்பாள் மாரியம்மா . அதேபோல அடுத்த வெள்ளோட்டப் பெறுவிழா 1993ம் ஆண்டு பங்குனி மாதம் 5ம் திகதி நடைபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை அன்னையின் பஞ்சரதபவனியை வெகுசிறப்பாக பார்வையிட்டு வருகின்றோம் .
108 அடிவானளாவ உயர்ந்து நிற்கும் ராஐகோபுரத்தில் வீற்றிருந்து மாத்தளைவாழ் மக்களுக்கு அருளாட்சி கொடுத்துவருகின்றாள் அன்னைமுத்துமாரி. அன்னைமாரியின் குழந்தைகளில் நானும் ஒருத்தி. காலத்தால் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அன்னைமுத்துமாரியின் அன்பு என்றுமே மாறாது. மாத்தளை மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிர்களுக்கும் அம்பாளின் அருட்கடாட்சம் என்றுமே கிட்டும். இவ்வருடமும் மாரியம்மனின் அலங்காரத்தைக் கண்டுமாரிஅம்மாவை வழிபட்டுஅவளருள் பெற்று உயர்ந்து உயர்வடைவோமாக!
தொகுப்பு:-
திருமதி தேவிகாசன்
ஜெய் பிரசாந்த்…?
(B.F.A. Dip in Media)