Wednesday, May 8, 2024
Home » கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

- மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை

by Prashahini
February 22, 2024 3:30 pm 0 comment

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்று (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிரஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்

குறித்த வழக்கின் அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.எனவும் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் குறித்த வழக்கு மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதைக்குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்குதொடுவாய் மனித புதைக்குழி: வழக்கு விசாரணை இன்று

மாங்குளம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT