கல்விப் பொது தராதர உயர்தரத்துடனான 3000 பாடசாலைகளை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள், டிஜிட்டல் மயப்படுத்தப்போவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கும் செயற்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்றைய தினம், யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பத்துடன் நேரடி தொடர்புகளை முன்னெடுக்கும் வகையில் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சமமான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதே கல்வியமைச்சின் பிரதான நோக்கமெனத் தெரிவித்துள்ள அமைச்சர், அதனொரு அம்சமாகவே இந்த டிஜிட்டல் மயப்படுத்தல் அமையுமென்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு டிஜிட்டல் மயப்படுத்தும் பாடசாலைகள் அனைத்துக்கும் Smart Interactive Board ஐ பெற்றுக்கொ டுப்பதாகவும், இதற்கு சமகாலத்தில் சகல கல்வி வலயங்களிலும் உருவாக்கப்பட்டுள்ள கணனி வள மத்திய நிலையங்களை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாட்டில் மிக நெருக்கடியான நிலை காணப்பட்டதாகவும் எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு நீண்டவரிசை காணப்பட்டதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் பெரும் சவால் நிறைந்த காலகட்டத்தில் தாம், கல்வியமைச்சராக சவால்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையிலிருந்து மீண்டு மீளவும் பாடசாலை கட்டமைப்பை படிப்படியாக முன்னேற்றும் நடவடிக்கை கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேவையான சரியான தீர்மானங்களை அதற்காக எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தநிகழ்வில் பேராசிரியர் சிவா சிவநாதன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்