இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் பாரத் சர்வதேச மொபிலிட்டி எக்ஸ்போ 2024 (Bharat Mobility Expo 2024) கண்காட்சியில், சிறப்பு விருந்தினராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கலந்துகொண்டார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை நுகர்வோர் தொடர்புகள் அமைச்சர் பியூஷ் கோயலின் (Piyush Goyal) சிறப்பு அழைப்பினை ஏற்று இந்தியா சென்ற அமைச்சர் இம்மாநாட்டில் பங்கேற்றார்.
மூன்று நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச வாகன உற்பத்தியாளர்கள், மற்றும் முதலீட்டாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உட்பட தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் வடிவமைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். போக்குவரத்துக்கான எதிர்கால முக்கிய துறைகளை ஒரே தளத்திற்கு கொண்டு வரும் நோக்கின் கீழ் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மோட்டார் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள எண்ணூறுக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் இதில் கலந்து கொண்டனர். கண்காட்சியுடன் இணைந்ததாக பல்வேறு தலைப்புகளில் தொழில்துறை தலைவர்கள் பங்கேற்புடன் 20 மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மோட்டார் வாகனத் துறையில் தொழில்நுட்ப தீர்வுகள், கட்டுமான உபகரணங்கள், கலப்பின மற்றும் மின்சார வாகனங்கள் பல அம்சங்களின் கீழ் அதற்கான கூடங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. மேலும் மோட்டார் வாகனத் துறையில் இந்தியா அடைந்துள்ள வெற்றியை உலகுக்கு எடுத்துரைப்பது இக் கண்காட்சியின் மற்றொரு நோக்கமாக இருந்தது. போக்குவரத்துத் துறைக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்ட பல தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தயாரிப்புகளும் இங்கு வெளியிடப்பட்டன.
கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர், அதிநவீன பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட இலங்கை உட்பட பல நாடுகளில் மோட்டார் வாகன உற்பத்தி துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் புதிய தயாரிப்புக்களை அவதானித்ததுடன், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.