இந்தியாவினதும் பிரான்ஸினதும் பரஸ்பர முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் புத்தாக்கங்களையும் இந்தியாவுக்கு வழங்குவதில் தேல்ஸ் நிறுவனம் பெருமை அடைவதாக அந்நிறுவனத்தின் உப தலைவரும் இந்தியாவுக்கான பணிப்பாளருமான அசிஷ் சரப் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. க்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ள அவர், பகிரப்பட்ட பெறுமானங்களிலும் அபிலாஷைகளிலும் ஆழமாக வேரூன்றிய இரு தரப்பு நட்புறவை இந்தியாவும் பிரான்ஸும் கொண்டுள்ளன. இந்த நட்புறவு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னேற்றகரமான முறையில் நீடித்துவருகிறது.
இந்த ஒத்துழைப்பானது பாதுகாப்பு, விண்வெளி, இணையப் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் நிலைபேறானவை என்பவற்றில் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. அவை புத்தாக்க மற்றும் தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதற்கு பங்களிக்கக்கூடியனவாக உள்ளன. அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஊடாக புத்தாக்க மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் எமது நிறுவனம் ஆர்வமாக உள்ளது.
இதேவேளை இந்திய சந்தையானது, பாதுகாப்பு, விமான போக்குவரத்து, டிஜிட்டல் அடையாளம் மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் என்பவற்றில் எமக்கு நிறையவே வாய்ப்புக்களை வழங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார்.
தேல்ஸ் இந்தியா நிறுவனம் 2000 தொழில்வாண்மையாளர்களையும் 1500 பொறியியலாளர்களையும் உள்ளடக்கி பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, டிஜிட்டல் அடையாளம், பாதுகாப்பு தீர்வுகள் ஆகிய துறைகளில் வெற்றிகரமாக செயற்படுவது குறிப்பிடத்தக்கது.