கடுவெல மற்றும் அத்துருகிரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் விரைவான வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்.கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
போக்குவரத்தை மையமாகக் கொண்ட அத்துருகிரிய மற்றும் கடுவெல நகர அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மேஜர் பிரதீப் உதுகொடவின் அழைப்பின் பேரில், போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவின் தலைமையில் கடுெவல மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
அத்துருகிரிய கடுவெல பிரதேசங்களில் மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிரமங்களை குறைப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உதுகொட மற்றும் ஏனைய அதிகாரிகள் அண்மையில் இந்த நகரங்களின் போக்குவரத்து நெரிசலை அவதானிப்பதற்காக அந்த பகுதிகளில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.இதனடிப்படையில்,
சுமார் 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் ஆரம்பமாக உள்ளன.நிதி வசதிகளைப் பெற்று, இந்த அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துருகிரிய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, தற்போதுள்ள பஸ் நிலையத்தை, மில்லேனியம் சிட்டி குடியிருப்புக்களை சுற்றியுள்ள பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட காலி நிலத்தில் அமைக்கவும், மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, சாலைகளை விரிவுபடுத்த அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு நட்ட ஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அத்துடன் நகரின் மத்தியில் தற்போதுள்ள மணிக்கூட்டு கோபுரத்தினால் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க மாற்று நடவடிக்கை எடுப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.