வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கையடக்க தொலைபேசியுடன் தப்பிச்சென்ற கைதி நேற்று பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரகசியமாக அந்த கைதி உபயோகித்துவந்த கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துக்கொண்டு கைதி தப்பிச்சென்றதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, அவரை பிலியந்தலை நிவன்திட்டிய பகுதியில் வைத்து கைதுசெய்ய முடிந்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்துக்காக நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அவரது தண்டனைக் காலம் நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள போதும் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.