குரோதம், வைராக்கியம் மற்றும் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது உண்மையை உரிய வகையில் முன்னெடுக்கும் சமூக ஊடக கலாசாரத்துக்கு இடமளிப்பது அவசியம் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மிக மோசமான வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சமூக ஊடகத்தின் செயற்பாடுகள் முக்கியமானவை. எனினும் சமூகத்தில் இரு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பினர் மிகவும் சிறந்த முறையில் இந்த சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர். அவர்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நன்மை பயக்கும் விதத்தில் இந்த ஊடகங்களை உபயோகிக்கின்றனர்.உலகின் வளர்ச்சி யடைந்த நாடுகளிலும் அவ்வாறான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. அந்த வகையில் சிறந்த வகையில் முன்னெடுக்கப்படும் சமூக வலைத்தளங்களுக்கு இடமளிப்பதுடன் குரோதம், வைராக்கியம் மற்றும் மத ரீதியான மோதல்களுக்கு வழிவகுக்கும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்