இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கானதும் மலையக மக்களின் முன்னேற்றம் தொடர்பானதுமான விடயங்களில் தமது முன்னோடித் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு செயற்பாடுகள் தடையின்றி தொடரும் என அ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் புதிதாக எழுதியுள்ள ‘இலங்கையில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் 200’ என்ற நூலின் சிறப்பு பிரதியை கையளித்து உரையாடிய போதே இந்தக் கருத்தினை எடப்பாடி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறனும் கலந்துகொண்டுள்ளார்.
தமிழக அரசின் ஏற்பாட்டில் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சர்வதேச வர்த்தக மைய வளாகத்தில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டு மேடையில் வைத்து பன்னாட்டு படைப்பாளர்கள் மத்தியில் சதீஷ்குமாரின் மேற்படி நூல் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டு நிகழ்வில் இலங்கையிலிருந்து எம்.பிக்களான மனோ கணேசன், வே. இராதாகிருஷ்ணன், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.