தேசிய நிர்மாண சங்கத்தினுடைய மட்டக்களப்புக் கிளையின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் அஞ்சனா மண்டபத்தில் நடைபெற்றதுடன், மட்டக்களப்பில் நிர்மாணத்துறையை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் இந்நிகழ்வில் அதிதிகளால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய நிர்மாண சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், இலங்கை தேசிய நிர்மாண சங்கத் தலைவர் எம்.டரின்டன் பொல் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இந்நிகழ்வில் உயர் அதிகாரிகள், பொறியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், அரசாங்க ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கொவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் நிர்மாணத்துறையில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது இத்துறை வளர்ச்சி அடைவதற்கு அவர்களின் அர்ப்பணிப்பான சேவையே காரணமென்றார்.