தென் கொரியாவின் இரு தீவுகளுக்கு அருகில் வட கொரியா நேற்று 200க்கும் அதிகமான பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. இது அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இதற்கு பதிலடி வழங்கப்படும் என்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
இரு நாட்டுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்திருக்கும் இந்த சம்பவத்தை அடுத்து குறித்த இரு தீவுகளின் குடிமக்களை வெளியேறும்படி தென் கொரியா உத்தரவிட்டுள்ளது. இதில் ஒரு தீவு மீது வட கொரியா 2010 ஆம் ஆண்டிலும் ஷெல் குண்டுகளை வீசி இருந்தது. அப்போது நால்வர் கொல்லப்பட்டனர்.
தென் கொரியா மற்றும் அதன் கூட்டாளியான அமெரிக்காவுக்கு எதிரான போருக்குத் தயாராகி இருப்பதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொன் உன் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வட கொரியாவின் தாக்குதலால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. இருப்பினும் வட கொரியாவின் தாக்குதல்கள் தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென் கொரிய அரசு எச்சரித்துள்ளது.