இங்கினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் ஆகியோர் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆறுகள், குளங்களை அண்டிய பகுதிகளுக்கு கள விஜயமொன்றினை நேற்றுமுன்தினம் மாலை மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து மழையுடனான வானிலை தொடருமானால் தாழ்நிலப்பிரதேசங்கள் மூழ்குவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதாக பிரதேசசெயலாளர் இதன்போது தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு ஆறு, சம்மாந்துறை பல்லாறு, கல்லோய இடதுகரை ஆறு போன்ற இடங்களை இவர்கள் பார்வையிட்டனர்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)