விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (28) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்ட விவசாயிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் வடமாகாண பிரதி பணிப்பாளரிடம் ஆளுநர் கேள்விகளை முன்வைத்தார்.
எவ்வித தரச் சான்றிதழுமின்றி குப்பிளான் களஞ்சியசாலைக்கு விதை உருளைக்கிழங்குகள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன?, இதற்கான அனுமதியை வழங்கியது யார்?, தற்போது அவற்றை அழிப்பதற்குரிய செலவு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மாற்றுச் செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆளுநர் கேள்விகளை முன்வைத்தார்.
இந்நிலையில், விதை உருளைக்கிழங்கு இறக்குமதியில் மோசடிகள் இடம்பெற்றிருக்கக் கூடுமென்று சந்தேகிப்பதால், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
ஆளுநரின் இந்த தீர்மானத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவும் இணக்கம் தெரிவித்தார்.