இராதாகிருஸ்ணன் MP இரங்கல்
நுவரெலியா மாநகர சபையின் நீண்டகால உறுப்பினரும் முன்னாள் பிரதி முதல்வருமான எல்.நேருஜி சுகயீனம் காரணமாக நேற்று கொழும்பில் காலமானார்.
இவர் நுவரெலியா மாநகர சபைக்கு நியமன உறுப்பினராக 1988ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கவால் நுவரெலியா மாநகர சபைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராகவும் நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் நீண்டகால தலைவர் மற்றும் செயலாளராகவும் இருந்து பெரும் சேவையாற்றியிருந்தார்.
இவரது மறைவையிட்டு நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
வேலுசாமி இராதாகிருஸ்ணன் எம்.பி. தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தனது உயிருக்கும் மேலாக கால்பந்தாட்ட விளையாட்டை நேசித்தவர் மறைந்த அமரர் நேருஜி. இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராகவும் நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் நீண்டகால தலைவர் மற்றும் செயலாளராக இருந்து பெரும் சேவையாற்றியிருந்தார்.
இவருடைய உலகமே நுவரெலியா கால்பந்தாட்டத்தை முன்னேற்றுவதிலேயே இருந்தது. இவருடைய இழப்பு என்றும் ஈடுசெய்ய முடியாது.
நுவரெலியாவில் இன்று இளைஞர்கள் கால்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றார்களாயின், அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நேருஜி. அவர் யாரிடம் சென்று என்ன உதவி கேட்டாலும் அது கால்பந்தாட்ட விளையாட்டுக்கு மாத்திரமே” என்றார்.