இலங்கை துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க சுமார் மூன்று ஆண்டுகளின் பின்னர் முதல் முறை களமிறங்கிய முதல் தர கிரிக்கெட் போட்டியில் 10 ஓட்டங்களையே எடுத்தார்.
SSC கழகத்திற்காக ஆடும் குணதிலக்க பிரதான கழகமட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரில் நேற்று முன்தினம் (23) நுகேகொடை விளையாட்டு நலன்புரி கழகத்திற்கு எதிராக களமிறங்கினார். மொரட்டுவை டி சொய்சா அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவிஷ்க பெனாண்டோவுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்த அவர் 21 பந்துகளில் 2 பெண்டரிகளுடன் 10 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த கழகமட்ட ஒருநாள் தொடரில் பி குழுவில் முதலிடத்தை வகிக்கும் எஸ்.எஸ்.சி அணி இந்தப் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய சர்ச்சைக்கு முகம்கொடுத்த குணதிக்க மீது எஸ்.எஸ்.சி கழகம் விதித்திருந்த தடையை அந்தத் கழகம் கடந்த வெள்ளிக்கிழமை (22) உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கியதை அடுத்து குணதிலக்கவால் இலங்கை கழக மட்டப் போட்டிகளில் களமிறங்க முடிந்தது. ஏற்கனவே அவர் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் சபை சில மாதங்களுக்கு முன்னர் நீக்கி இருந்தது.
குணதிலக்க கடைசியாக 2020 ஆம் ஆண்டே எஸ்.எஸ்.சி அணியை பிரதிநிதித்துவம் செய்து கழகங்களுக்கு இடையிலான முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
இலங்கை அணியுடன் டி20 உலகக் கிண்ணத்தில் ஆட அவுஸ்திரேலியா சென்ற குணதிலக்க பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் டோனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியை மாத்திரம் கொண்ட வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட இந்த சம்பவத்தில் 32 வயது குணதிலக்க கிழக்கு சிட்னியில் குற்றம் சுமத்திய பெண்ணின் விட்டில் வைத்து ஆணுறை அணிவதற்கு மறுத்ததாக கூறப்பட்டது. எனினும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் கழகப் போட்டிகளில் களமிறங்கும் தனுஷ்க