நோய்த் தொற்று காரணமாக மாத்தறை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட மாத்தறை சிறைச்சாலை கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் (22) குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்தார்.
மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சந்தேகநபர் கொலை குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி சிறைக் காவலில் வைக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோய் அறிகுறிகளுடன் மேலும் 8 சிறைக்கைதிகள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாத்தறை சிறைச்சாலைக்கு புதிதாக அழைத்து வரப்படும் கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கைதிகளை பார்வையிட வருவோர் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நடந்து கொள்ளுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.