இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் அடுத்த மாதம் மோதவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணையின் திகதிகளில் மாற்றங்கள் ஏற்படாத போதும், போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் ஒருநாள் போட்டிகள் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், டி20 போட்டிகள் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்தத் தொடர் முழுமையாக கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை வரும் சிம்பாப்வே அணி ஜனவரி 6, 8, 11 ஆம் திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடவிருப்பதோடு தொடர்ந்து ஜனவரி 14, 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும்.