புத்தளம் பிரதேசங்களில் பெருகி வரும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய டெங்கு அவதான நிலைமையைக் கருத்திற்கொண்டு புத்தளம் நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பொலிசார் இணைந்து புத்தளம் ஸாலிஹீன் பள்ளி பிரதேசம் மற்றும் கடுமையான் குளம் பகுதிகளில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அதிகாரிகளால் நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உரியவர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை, ஸாலிஹீன் பள்ளி மஹல்லா வாசிகளின் வீடுகள் மிகவும் சுத்தமாக காணப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள், குடம்பிகள் ஒன்றும் காணப்படவில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் மகிழ்வோடு தெரிவித்தனர்.
ஏனைய பிரதேசங்களிலும் பொதுமக்கள் தத்தம் வீட்டு வளவுகளை இவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
புத்தளம் நகர சபை செயலாளர் பிரீத்திகா அவர்களின் வழிகாட்டலுடன் நகரசபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் தீவிர அர்ப்பணிப்புடன் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(புத்தளம் தினகரன் நிருபர்)