மதுபான போத்தலில் போலி ஸ்டிக்கர் விவகாரம் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்தமை தொடர்பில் சிஐடி யினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து விசாரணைகளும் நேர்மையான விதத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது என்றும் இராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் புத்திக்க பதிரண எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இது மேன்முறையீட்டு குழு மற்றும் நீதிமன்றம் வரை சென்ற விவகாரமாகும்.நிதியமைச்சு தனியான குழுவொன்றை நியமித்து அதன் மூலம் இதற்கான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும். அதனை சபையில் சமர்ப்பிக்கவும் முடியும்.
புதிய ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.
அந்த வகையில் அதில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமக்கு பல வழிகள் உள்ளன.
இந்த விடயத்தில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது .நேர்மையான விதத்திலேயே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. போலி ஸ்டிக்கர் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்தமை தொடர்பில் சிஐடி யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து நிறுவனங்களிலும் சிசிடி கெமராக்கள் பொருத்தப்பட்டு தலைமையகம் மூலம் அது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றன.
தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களில் வருமான அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்