சர்வதேச வணிக தொடர்புகள் சட்டமூலம் அடுத்த வருட முற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனவரி 10 அல்லது 11 ஆம் திகதி அந்த சட்ட மூலம் மீதான விவாதம் நடத்தப்படுமென்றும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வணிக மேல் நீதிமன்ற நீதிபதிகள் தகைமை கொண்டவர்களாக உள்ளனரென்றும் சொத்துக்கள் தொடர்பான சட்டங்கள் சம்பந்தமான பட்டப்பின் படிப்பு பட்டத்தை அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், வணிக வழக்கு விசாரணைகளுக்கான ஐந்தாவது நீதிமன்றம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி எம்பி எரான் விக்கிரமரட்ண எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் தகைமைகள் தொடர்பில் எரான் விக்ரமரட்ன எம்பி சபையில் சந்தேகங்களை எழுப்பினார்.
அது தொடர்பில் நான் பதில் வழங்காவிட்டால் அந்த நீதிபதிகளின் செயற்பாடு தொடர்பில் தவறான தகவல்களே நாட்டுக்குப் போய்ச் சேரும்.
வணிக மேல் நீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உயரிய நோக்கங்களோடு வணிக வழக்குகள் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதை நோக்காகக் கொண்டே இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)