இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் புதிய தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2035க்கு பின்னரான தொழில்நுட்பம் எமது நாட்டை தொழிநுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கிணங்க ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் விஞ்ஞான தொழில்நுட்ப வேலைத்திட்டங்களுக்கு அனைவரும்
பூரண ஒத்துழைப்பைவழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அடித்தளம் இல்லாமல் எம்மால் எதிர்காலம் நோக்கி முன்னேறிச் செல்ல முடியாது. நாட்டை முன்னேற்றவும் முடியாது.
அதேபோன்று விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் குறிப்பிடும் போது, இதன் மூலம் கிடைக்கும் பயன்பாடுகளை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் நவீன தொழிநுட்ப உபயோகத்துடனேயே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பே காணப்படுகிறது. இந்நிலையில் இதன் மூலம் உச்ச அளவிலான பயன்பாட்டை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான ஒரே தீர்வு தொழிநுட்பம் மூலமான விவசாயத்திற்கு செல்வதே.
அதனால் நாம் வேளாண்தொழிநுட்ப முறை தொடர்பில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளோம். நாட்டின் விவசாயத் துறையை நவீனமயமாக்க தனியார் துறைக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
அதேபோன்று வலுசக்தி தொடர்பில் குறிப்பிடுவதானால் நாம் பல கிகாவோட்களை காற்றாலை மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளோம். அதேபோன்று 200 கிகாவோட்டை சூரிய சக்தி மின்சாரம் மூலம் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
நாம் இந்தியாவிடமிருந்து உதவி பெற்றுக் கொள்ள ஒரு முறைமை காணப்படுகிறது.
அது கிரீன் ஹைடிஜன் மற்றும் அமோனியா முறையாகும். இதில் ஹைடிஜன் முறையை கடல்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றோம்.
ஜேர்மன் மற்றும் பிரான்ஸுடன் நாம் கிரீன் தொழிநுட்பம் தொடர்பி ல் கலந்துரையாடி வருகின்றோம். மேலும் 4, 5 வருடங்கள் செல்லும்போது அது சாத்தியப்படும்.
அந்த வகையில் 2035க்கு பின்னர் வரும் தொழிநுட்பம் எமது நாட்டை தொழிநுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகம் செய்யும்.
லோரன்ஸ் செல்வநாயகம்