அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை எயார் அரேபியா ஆரம்பித்தது.
முதல் விமானம் கடந்த 08 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
158 பயணிகள் மற்றும் 08 விமான பணியாளர்களைக் கொண்ட எயார் அரேபியா விமானம் 3L-197, அன்றைய தினம் இரவு 08:00 மணிக்கு அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 08.00 மணிக்கு வந்து சேரும், அதே விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் பொறியியலாளர் அதுல கல்கட்டிய, விமானப் போக்குவரத்து சேவைகளின் தலைவர் திரு. நிஷான் அபேவர்தன மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த முதல் விமானத்தை வரவேற்க, ஏராளமான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.