புத்தளம் – களப்பு சிறுகடல் பகுதியில் நீருக்குள் மூழ்கியிருந்த நிலையில் சுமார் 4 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விஜய கடற்படை கப்பலுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (09) குறித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று நீரில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளமை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி கிடந்த அந்த பொதியில் மிக நுணுக்கமாக அடைக்கப்பட்டிருந்த நான்கு (04) கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்தமை சோதனையின் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தங்கத்தை கொண்டுவந்தவர்கள் , பின்னர் எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் நீருக்குள் மூழ்கடித்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படைநினர் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 27 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கற்பிட்டி பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்கள் பயணித்த டிங்கி இயந்திர படகு மற்றும் கைப்பற்றப்பட்ட 4 கிலோ தங்கம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்