நாட்டில், வளர்ந்து வரும் இளம் வீரர்களை கௌரவிக்கும் வகையில், ‘தேசிய இளைஞர் வீரர்கள் விருது’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.எதிர்கால சமுதாயத்தில் மிகுந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அதிகூடிய திறன்களுள்ள தலைமைப் பண்புகளைக் கொண்ட ஆற்றல்மிக்க, பல்துறை மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக இளைஞர்களை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
ரண்டம்பேயிலுள்ள தேசிய மாணவர் பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாணவர் படையணியின் 41வது தகுதிகாண் அதிகாரிகளின் சின்னம் அணிவிக்கும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில், 2022 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 பெண் உத்தியோகத்தர்கள் உட்பட 64 தகுதிகாண் உத்தியோகத்தர்கள் தங்களது பயிற்சியை நிறைவு செய்தமைக்காக இரண்டாம் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டனர்.
142 ஆண்டுகால தேசிய மாணவர் படையணியின் வரலாற்றில் முதன்முறையாக இம்முறை, அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஆணையிடும் வாள்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பதில் பாதுகாப்பு அமைச்சர் இவற்றை வழங்கினார்.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க, விமானப்படையின் பிரதி பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, தேசிய மாணவர் படையணியின் பயிற்சி நிலைய கட்டளைத் தளபதி கேர்ணல் ஆர்.எம். பிரேமதிலக்க, முப்படை அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.