சவால்களைப் பொறுப்பேற்று தீ மூட்டும் நடவடிக்கைகளுக் கன்றி, தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டை முன்னேற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு இந்த வரவு செலவு திட்டம் நல்ல வாய்ப்பு என்றும் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் பெருமளவு கருத்துக்கள் விவாதங்களின் போது முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் கருத்துக்கள் முன் வைக்கப்படுவது வழமை.
எனினும், மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனிப்பட்ட நோக்கங்களுக்கு அப்பால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை பார்ப்பது அவசியம்.
அவ்வாறில்லாவிட்டால் நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்ட யோசனை இழக்கப்பட்டு விடும். இதைக் கருத்திற் கொண்டு நல்லதை நல்லதாகவும் குறைகளை சுட்டிக்காட்டுவதும் இடம் பெறுவது சிறந்தது. இதற்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை சிறந்த வகையில் முன்னெடுப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் சிறந்த வாய்ப்பாகும்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றும் பெருமளவிலானோர், தமது அரசாங்கம் அல்லது தாம் விரும்புகின்ற அரசாங்கம் தொடர்பில் அன்று எவ்வாறு கருத்துக்களை தெரிவித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
லோரன்ஸ் செல்வநாயகம்