புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கியுல பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீருக்குள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரங்குளி, வேலாசிய பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலாகே பந்துல ஹேரத் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக மனைவியை பிரிந்து வாழும் இவர், தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிப்பதை தனது தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கியுல பகுதியில் உள்ள தனியார் நபர் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் வெள்ளநீர் தேங்கியிருக்கும் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்