ரூ. 10 மில்லியன் (ரூ. 1 கோடி) இலஞ்சம் பெற முற்பட்டதாக கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் சுபுன் பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்றையதினம் மன்றில் ஆஜர்படுத்தியபோது, ரூ. 25,000 ரொக்க பிணையிலும் ரூ. 25 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய இருவருக்கும் நவம்பர் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர்கள் ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுற்றாடல் அதிகார சபையின் தலைமை பதவியிலிருந்து அந்நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் சுபுன் பத்திரகே குறித்த பதவியலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.