கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மணல் அகழ்வு
வடக்கு மாகாணத்தின் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல் நியாயமான விலையிலும் தட்டுப்பாடின்றியும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, வடமராட்சி கிழக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வினை மேற்கொள்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
குறிப்பாக பெரும்பாலான மணல் திட்டுக்கள் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பிராந்திய அதிகாரிகள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், நிறைவேற்று நிலை அதிகாரிகளும் சூம் காணொளி ஊடாக கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கும், மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அடையாளப்படுத்தப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைத்து திணைக்களங்களும் வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் பொலிஸார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவை தொடர்பில் ஆலோசனைகளையும் வழங்கினார்.
(யாழ்.விசேட நிருபர்)