வாகன விபத்து அனர்த்தங்களில் இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில், 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல இது தொடர்பில் தெரிவித்துள்ளார். இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 முதல் ஒக்டோபர் மாதம் 15 வரையான காலப்பகுதியில் 115 சிறுவர்கள் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் கவனயீனம், பாதுகாப்பற்ற வாகன செலுத்தல்க ளாலே,இவ்விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,2022 இல் 2,539 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை இம்மாதம் 15 வரையான இவ்வருடத்தில் 1,790 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த வருட விபத்துக்களில் 18 வயதுக்கு உட்பட்ட 129 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஒக்டோபர் 15 வரையான காலத்தில் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இது சிறுவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதியாகும். மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலே அதிகளவில் சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்.
தாய், தந்தையினர் தலைக்கவசம் அணிந்தாலும் பிள்ளைகளுக்கு அணிவிப்பதில்லை. இதனால் தலையில் அடிபட்டு சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்.
அண்மைக் காலங்களில் இதுபோன்ற பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்