வங்கியின் வட்டி வீதத்தை இதுவரை குறைக்காமலுள்ள வர்த்தக வங்கிகள் தொடர்பில் மத்திய வங்கி தீவிர கவனம் செலுத்திவருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், அண்மையில் வங்கி வட்டி வீதத்தை குறைத்து மத்திய வங்கி சுற்றுநிரூபத்தை வெளியிட்டது. எனினும், இதனைப் பின்பற்றுவதில் இதுவரை வர்த்தக வங்கிகள் தவறியுள்ளன. அந்தவகையில் வட்டி வீதத்தைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி தீவிர கவனம்
செலுத்திவருகிறது. நாட்டில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டே மக்களுக்கு சலுகை வழங்கும் வகையில் வங்கிகளுக்கான வட்டிவீதத்தை மத்திய வங்கி குறைத்தது. அனைத்து அரச மற்றும் தனியார்துறை வர்த்தக வங்கிகள் அத்துடன் நிதி நிறுவனங்கள்
ஆகியவற்றுக்கும் இந்த சுற்றறிக்கையின் உள்ளடக்கம் பொருந்தும். இதனால்,இச்சுற்றுநிருபத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. அந்தவகையில் அவ்வாறு வட்டி வீதத்தைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)