இஸ்ரேலை நோக்கி செலுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை செங்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று இடைமறித்துள்ளது.
தரையை தாக்கும் மூன்று க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பல ஆளில்லா விமானங்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் பட் ரைடர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் யெமனின் ஹுத்தி படைகளால் நடத்தப்பட்டிருப்பதோடு இஸ்ரேலை நோக்கியதாக இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான போரை அடுத்து பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்ட போர் கப்பல்களில் ஒன்றான யு.எஸ்.எஸ். கார்னி செங்கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகள் திறந்த நீர்ப்பகுதியில் விழுந்ததாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ரைடர் தெரிவித்தார்.
காசா போர் பிராந்தியத்திற்கு பரவும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இரு விமானம்தாங்கி கப்பல்கள் உட்பட போர் கப்பல்களை இஸ்ரேலுக்கு அருகில் அமெரிக்க நிலைநிறுத்தியது. தவிர, 2,000 துருப்புகளை தயார்நிலையில் வைப்பதற்கும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.