கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம். அல்லாஹுத்தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு அவசரமாக சுகத்தையும் கொடுத்தருள்வானாக எனப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும் பொழுது அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும். வியாழன் மற்றும் திங்கட்கிழமை தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் எனவும் உலமா சபை தெரிவித்துள்ளது.
அவ்வகையில் பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் வியாழக்கிழமை மற்றும் திங்கட்கிழமை தினங்களில் நோன்பு நோற்று துஆக்களில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களை வேண்டிக்கொள்கிறது.
அத்துடன் இதற்காக அனைத்து மஸ்ஜித்களிலும் ஐவேளைத் தொழுகைகளில் குனூத் அந் நாஸிலாவை ஓதி வருமாறு ஏலவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதில் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜே. அப்துல் ஹாலிக் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.