குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கும் வகையில் சந்தேகநபர் போலி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கோட்டை நீதிவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரான நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கி, நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அவர் கடிதமொன்றையும் சமர்ப்பித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.