தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல பரிணாம வளர்ச்சிகளுடன் தேசிய ரீதியில் தனது செயற்பாட்டை முன்னெடுத்து ஒரு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக திகழ்வதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தினால் நடாத்தப்பட்ட உளவளத்துணை, ஆங்கிலம் ஆகிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்த டிப்ளோமா தாரர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றுமுன்தினம் ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பல்கலைக்கழகங்கள் சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் அவை பரிபூரணமான பல்கலைக்கழகமாக மாறும். அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப்பிராந்தியத்தில் சமூகத்துடன் இணைந்து சமூக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறுகின்ற மாணவர்கள் வெறுமெனே பட்டதாரியாக மட்டும் வெளியேறாமல் சிறந்த ஒரு கல்விமானாக வெளியேறுவதற்கான வசதிகளை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது.
உலக மாற்றத்திற்கேற்ப ஒவ்வொருவரும் கணினி மற்றும் ஆங்கிலம் ,தொழில்நுட்ப அறிவுகளையும், வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் பூரணமானவர்களாக மாற முடியும்.
தற்போதைய கால கட்டத்தில் உளவளத்துனை என்பது முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இக்கற்கை நெறியை கற்று டிப்ளோமா பட்டத்தை பெற்றுள்ளவர்கள் தான் சார்ந்த சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இப்பிராந்தியத்தில் விவசாய, மீன்பிடி துறைகள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. பிராந்திய பொருளாதார மேம்பாட்டிற்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெரும் பங்கினை வகித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபா்)