கடும் மழையுடனான சீரற்ற காலநிலையையடுத்து நாட்டில் எட்டு மாவட்டங்களை சேர்ந்த 30 பிரதேச செயலாளர் பிரிவுகள் மண் சரிவு அபாய எச்சரிக்கை பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது .
இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட 8 மாவட்டங்களின் 30 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐந்து மாவட்டங்களில் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 30 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் 316 வீடுகளும் நான்கு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்ததுடன் 1,275 குடும்பங்களைச் சேர்ந்த 5551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிக ளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையும் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்