கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மணல் விநியோக விடயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவசியம் கருதி நேற்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் (02) திங்கட்கிழமையிலிருந்து, காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை அனுமதி வழங்கப்பட்ட வகையில், மணல் விநியோகம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (26) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே இத்தீர்மானத்தை அமைச்சர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற
சட்டவிரோத மணல் கடத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 16 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் மணல் அகழ்வுக்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கிணங்க மணல் விநியோகம் துறைசார் தரப்பினரின் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மண் கடத்தல், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று முடிவுகளும் எடுக்கப்பட்டன .