திறைசேரியிலிருந்து வீடமைப்பு அதிகார சபைக்கு ரூ. 751 மில்லியன்

- நிறைவு செய்யப்படாத 2,265 வீடுகள் விரைவில் நிர்மாணம்
- 'உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை' வீடமைப்பு பணிகள் 50% பூர்த்தி

'உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை' வீடமைப்புத் திட்டத்தின் நிறைவு செய்யப்படாத வீடுகளின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திறைசேரியினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ரூ. 751 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை காரணமாக, இந்த வீட்டுத் திட்டம் சுமார் நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, திறைசேரி இந்நிதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த வீடமைப்பு திட்ட பணிகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்ட 2,265 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த 2,265 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ள நிலையில் பூர்த்தி செய்ய முடியாத அனைத்து வீடுகளின் நிர்மாணப் பணிகளையும் மீள ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு  நாளை" வீடமைப்பு உதவித் திட்டத்தின் 50 வீதமான வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், 12,231 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதில் 6,039 வீடுகள் நிறைவு செய்யப்பட்டன. அத்துடன் 2022ஆம் ஆண்டு 1,465 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 25 வீடுகளே நிறைவு செய்யப்பட்டதாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடங்களில் 'உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை' வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

உங்களுக்கு  வீடு - நாட்டிற்கு நாளை வீடமைப்புத் திட்டம்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவின்  அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சொந்த வீடு இல்லாத குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான, இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இலங்கையிலுள்ள அனைத்து 14022 கிராம சேவைப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவுக்கும்ஒரு வீடாக 14,022 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.


Add new comment

Or log in with...