சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  கிராஞ்சி சிவபுர மீனவர்கள்  நேற்று (4) காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்.பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி  மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை  பண்ணைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு மீன்பிடி கரையோர தொழிலாளர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது உள்ளதாக தெரிவித்து கடந்த 4நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தமது தொழிலுக்கு இடையூறாக  தமது கடல் கரையோரம் முழுவதும் சட்டவிரோதமாக பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றினை அரச அதிகாரிகள் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லையெனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் சிலர் நேற்று யாழ். மாவட்ட பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

-தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும், அதிகாரிகள் எவரும் தமது இடத்திற்கு வந்து உரிய தீர்வை பெற்றுத் தர முயற்சிகளை மேற்கொள்ளவில்லையெனவும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்றொழிலாளர்கள் சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாட வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனைதொடர்ந்து கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பில் சாதகமான முடி வை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கடந்த சனிக்கிழமை (1) மதியம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மீனவர்களின் பிரச்சினைகளை குழுவினர் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் தமக்காக அமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றமையால் தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு தமது போராட்ட வடிவை மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் 5 ஆவது நாளாக நேற்று தமது போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுத்து வருகின்ற அதேவேளை மீனவர்களின் பிரதிநிதிகள் சார்பாக ஒரு குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை(4) காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்.பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப்  நிருபர்

 


Add new comment

Or log in with...