படைவீரர்களின் நினைவு தூபிக்கு ஜனாதிபதி அஞ்சலி

- பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் பங்கேற்பு

13ஆவது தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள தேசிய படைவீரர் நினைவிடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இலங்கை ஆயுதப் படைகள் பயங்கரவாதத்தை தோற்கடித்து மூன்று தசாப்தங்களாக நிலவிய கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து 2009 மே 18  அன்று நாட்டில் அமைதியை, நிலைநாட்டியது. பயங்கரவாதிகளுடனான போரின் போது ஏராளமான போர்வீரர்கள் தாய்நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர். 

இதற்கமைய, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உயிர் தியாகங்களைச் செய்த அனைத்துப் போர்வீரர்களும், அவர்கள் ஆற்றிய அளப்பரிய சேவைகளும் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டன.

தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் ரணவிரு சேவா அதிகாரசபையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களுக்களை  நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கெதிராக போரிட்ட வீரர்களின் அளப்பரிய சேவை பாராட்டப்பட்டதுடன், தேசிய கீதம் பாடப்பட்டு, போர்வீரர் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண, பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர மற்றும் முப்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...