-தொற்றை உறுதிசெய்ய விசேட ஆராய்ச்சி
நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள 96 தொற்று மாதிரிகளில் ஒமிக்ரோன் உள்ளிட்ட மோசமான கொரோனா வைரஸ் திரிபு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தலைவர் ஆகியோரினால் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு விஞ்ஞான ஆய்வுப்பிரிவுக்கு நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந் நிறுவனமே இத்தகைய ஆய்வுகளுக்கான முக்கிய நிறுவனமாக செயற்படுவதுடன் இனங்காணப்பட்டுள்ள 96 மாதிரிகளுக்கான பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.அத்துடன் பரிசோதனைகளின் முடிவுகளை வெகுவிரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மாதிரிகளின் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள நபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களாக நாட்டில் இதுவரை நான்கு பேர்இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்களில் முதலில் இனங்காணப்பட்ட நபர் நைஜீரியாவுக்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment